கேள்வி & பதில் | by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ.MA On Nov 21, 2021 Viewers: 401 0
கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில்
இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான்
சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா
காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள்
என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்!
அ.காஜா நஜிமுத்தீன்,
8வது தெரு, ஏர்வாடி, நெல்லை.
பதில்: முதலில் ஒன்றை தெரிந்து
கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் ஏற்பட்டதாக ஹதீஸில் சொல்லப்படவில்லை.
ஆனால் கொள்ளை நோய் ஏற்பட்டால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலை நபி(ஸல்)
அவர்கள் வழங்கியிருந்தார்கள். அதாவது, ஒரு பகுதியில் கொள்ளை நோய் ஏற்பட்டிருப்பதை நீங்கள்
செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கும் பகுதியில் அது ஏற்பட்டால்
அங்கிருந்து வெளியேறாதீர்கள்“ என்று கூறினார்கள். (புஹாரி 5728)
அடுத்து நீங்கள் கேள்வியில்
குறிப்பிட்டது போன்று ஜமாஅத்தாக தொழும்போது நேராகவும் நெருக்கமாகவும் நிற்க வேண்டும்
என்பது சரியே!
தொழுகையில் வரிசைகளை ஒழுங்குபடுத்திக்
கொள்ளுங்கள். ஏனெனில் வரிசையை ஒழுங்குபடுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதாகும் என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 722).
மேலும் வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! என்றும்
கூறினார்கள். (புகாரி 719)
இதுபோன்ற ஆதாரங்களின் படி
ஜமாஅத்தாக தொழும்போது வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும் என்பது தெளிவான விஷயம்.
ஆனாலும் நிர்பந்த சூழ்நிலையில், தொழுகைக்குள் செய்தே ஆக வேண்டிய
காரியங்களை கூட விடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, தொழுகையில் ஆரம்பத்தில் நிலையில்
நிற்பது ஒரு ஃபர்ளு (கடமையான காரியம்) இருந்தாலும் நிற்க இயலாத சூழ்நிலையில் நிற்காமல்
தரையில் உட்கார்ந்து தொழலாம். இதுபோல் வேறு சில விசயங்களையும் சொல்லலாம்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட
ஒருவர் இருமினாலோ தும்மினாலோ அருகிலிருப்பவருக்கும் தொற்ற வாய்ப்பிருக்கிறது என்று
மருத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும்
அறிவுறுத்துகிறார்கள்.
மருத்துவ அறிஞர்களின் இந்த
வழிகாட்டுதல் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதனால் தொழுகை
வரிசையிலும் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தொழுகைக்கு உள்ளே
உள்ள ஃபர்ளான காரியத்தைக்கூட சூழ்நிலை காரணமாக விட்டுவிட அனுமதியிருப்பது போல சூழ்நிலை
காரணமாக இந்த இடைவெளியும் அனுமதி என்ற நிலை ஏற்படுகிறது.
ஆனால் தொழுகை வரிசையில் இடைவெளியை கடைப்பிடித்துவிட்டு மற்ற
நிலைகளில் அதை பேணாமலிருப்பது முரண்பாடாக உள்ளது.